நிறுத்தல் குறியீடுகள்

நிறுத்தல் குறியீடுகள்
நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்):

எழுத்து என்பது மொழியின் வரிவடிவம், எழுதியதைத் தெளிவாகப் பொருளுணர நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்) இன்றியமையாதவை ஆகும்.

காற்புள்ளி ( , )

நிறுத்தி வாசிக்கக் குறிப்பிடப்படும். பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும்.

•  அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு.

•  நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும்.

•  இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.

•  ஐயா; அம்மையீர்,

•  சிறியவன் பெரியவன், செல்வன் ஏழை.

அரைப்புள்ளி ( ; )

தொடர்நிலைத் தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி வருதல் வேண்டும்.

•  வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.

•  சீர் - மாறுபாடு இல்லாதது; அளவு; இயல்பான தன்மை; ஒழுங்கு; சமம்; நேர்த்தி; அழகு; சீதனம்; செய்யுளின் உறுப்பு

முக்காற்புள்ளி ( : )

சிறுதலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற்புள்ளி வருதல் வேண்டும்.

•  சார்பெழுத்து :

•  பத்துப்பாட்டு 2:246

•  எட்டுத்தொகை என்பன வருமாறு:

முற்றுப்புள்ளி ( . )

தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி வருதல் வேண்டும்.

•  உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.

•  தலைமையாசிரியர், மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.

•  தொல்.சொல். 58.

•  18/02/2018.

வினாக்குறி ( ? )

ஒரு வினாத்தொடர், முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத் தொடராகவும், இருப்பின், இறுதியில் வினாக்குறி வருதல் வேண்டும்.

•  அது என்ன? (முற்று)

•  நீ வருகிறாயா? என்று கேட்டான். (நேர்கூற்றுத் தொடர்)

வியப்புக்குறி ( ! )

வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப் பின்பும் நேர்கூற்று வியப்புத்தொடர் இறுதியிலும் அடுக்குச் சொற்களின் பின்னும் வியப்புக்குறி வருதல் வேண்டும்.

•  எவ்வளவு உயரமானது!

•  என்னே தமிழின் பெருமை! என்றார் கவிஞர்

•  வா! வா! வா! போ! போ! போ!

விளிக்குறி ( ! )

அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் விளிக்குறி பயன்படுத்த வேண்டும். வியப்புக்குறியும் விளிக்குறியும் ஒரே அடையாளக்குறி உடையன.

•  அவையீர்!

•  அவைத்தலைவீர்!

மேற்கோள்குறி ('  '), ("  ")

ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி என இருவகைப்படும்.

ஒற்றை மேற்கோள்குறி வரும் இடங்கள்

ஓர் எழுத்தேனும் சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரைப்பெயர், நூற்பெயர் குறிக்கும் இடம், பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் ஒற்றைக்குறி வருதல் வேண்டும்.

•  'ஏ' என்று ஏளனம் செய்தான்.

•  பேரறிஞர் அண்ணா 'செவ்வாழை' என்னும் சிறுகதை எழுதினார்.

•  'கம்பனும் மில்டனும்' என்னும் நூல் சிறந்த ஒப்பீட்டு நூல் ஆகும்.

•  'செவிச்செல்வம் சிறந்த செல்வம்' என்பர்.

இரட்டை மேற்கோள்குறி வருமிடங்கள்

நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் இரட்டைக்குறி வருதல் வேண்டும்.

•  "நான் படிக்கிறேன்" என்றான்.

•  " ஒழுக்கமுடைமை குடிமை" என்றார்.

நிறுத்தக்குறிகள் எல்லாம் வெறும் அடையாளங்கள் அல்ல. அவையெல்லாம் பொருள்பொதிந்த அடிப்படையில் தோன்றியவை என்பதை மாணவர்கள் நன்குணர்ந்து அவற்றைப் பின்பற்றிப் பேசவும் எழுதவும் வேண்டும்.

II. உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

1. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்

விடை : பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

2. திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது

விடை : திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

3. தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது

விடை : தமிழ்மொழி செம்மையானது, வலிமையானது, இளமையானது.

4. கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்

விடை : கபிலன், “தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.

5. திரு.வி.க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது

விடை : திரு.வி.க. எழுதிய ‘பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.