தாராபாரதி

தாராபாரதி
தாராபாரதி 


பாரதம் அன்றைய நாற்றங்கால் 

புதுமைகள் செய்த தேசமிது 
பூமியின் கிழக்கு வாசலிது!

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் 

தேசம் உடுத்திய நூலாடை
மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு

மெய்யுணர்வு என்கிற மேலாடை!

காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் 

காவிரிக் கரையில் எதிரொலிக்க 
கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் 

கங்கை அலைகள் இசையமைக்க

கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக் 

காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்! 
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் 

கிழக்குக் கரையின் நலம்கேட்கும்!

*புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப் 

புன்னகை செய்த பொற்காலம்! 
கல்லைக் கூட காவிய மாக்கிக் 
கட்டி நிறுத்திய கலைக்கூடம்!

அன்னை நாட்டின் அமுத சுரபியில் 

அன்னிய நாடுகள்பசிதீர 
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது 
பூமியின் கிழக்கு வாசலிது!*


திண்ணையை இடித்துத் தெருவாக்கு!

உட்கார் நண்பா, நலந்தானா ? – நீ 
    ஒதுங்கி வாழ்வது சரிதானா? 

சுட்டு விரல்நீ சுருங்குவதா? உன் 

    சுயபலம் உனக்குள் ஒடுங்குவதா?
'புல்லாய்ப் பிறந்தேன் நானென்று' – நீ 

    புலம்ப வேண்டாம்; நெல்கூட 

புல்லின் இனத்தைச் சேர்ந்ததுதான் – அது
    பூமியின் பசியைப் போக்கவில்லை ?
கடலில் நான்ஒரு துளி'யென்று – நீ 
    கரைந்து போவதில் பயனென்ன? 
கடலில் நான்ஒரு முத்தென்று – நீ 
    காட்டு; உந்தன் தலைதூக்கு!
வந்தது யாருக்கும் தெரியாது – நீ 
    வாழ்ந்ததை உலகம் அறியாது; 
சந்ததி கூட மறந்துவிடும் – உன் 
    சரித்திரம் யாருக்கு நினைவுவரும் ?
திண்ணை தானா உன்தேசம் ? – உன்
    தெருவொன் றேயா உன்னுலகம்,
திண்ணையை இடித்துத் தெருவாக்கு   
    தெருவை மேலும் விரிவாக்கு!
எத்தனை உயரம் இமயமலை! – அதில்
    இன்னொரு சிகரம் உனதுதலை!
எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ
    இவர்களை விஞ்சிட என்னதடை?
பூமிப் பந்து என்னவிலை? – உன் 
    புகழைத் தந்து வாங்கும்விலை! 
நாமிப் பொழுதே புறப்படுவோம் – வா
    நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!


1. 26.02.1947 – 13.05.2000

2. தாராபாரதியின் இயற்பெயர் – இராதாகிருஷ்ணன்.


3. கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் – தாராபாரதி.

4. இயற்றிய நூல்கள்
  1. புதிய விடியல்கள் 
  2. இது எங்கள் கிழக்கு
  3. விரல் நுனி வெளிச்சங்கள்

5. பாரதம் அன்றைய நாற்றங்கள் – தாராபாரதியின் கவிதைகள்.

6. கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.

7. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் – தாராபாரதி.

Enable Notifications OK No thanks