தமிழ் ஒளி

தமிழ் ஒளி
கவிஞர் தமிழ் ஒளி


பட்ட மரம்


மொட்டைக் கிளையொடு 
நின்று தினம்பெரு 
மூச்சு விடும்மரமே!
வெட்டப் படும் ஒரு 
நாள்வரு மென்று 
விசனம் அடைந்தனையோ?
குந்த நிழல்தரக் 
கந்த மலர்தரக் 
கூரை விரித்தஇலை !
வெந்து கருகிட 
இந்த நிறம்வர 
வெம்பிக் குமைந்தனையோ?
கட்டை யெனும்பெயர் 
உற்றுக் கொடுந்துயர் 
பட்டுக் கருகினையே!
பட்டை யெனும்உடை 
இற்றுக் கிழிந்தெழில் 
முற்றும் இழந்தனையே!



காலம் எனும்புயல் 
சீறி எதிர்க்கக் 
கலங்கும் ஒருமனிதன்
ஒலமி டக்கரம் 
நீட்டிய போல்இடர் 
எய்தி உழன்றனையே!
பாடும் பறவைகள் 
கூடி உனக்கொரு 
பாடல் புனைந்ததுவும் 
மூடு பனித்திரை 
யூடு புவிக்கொரு 
மோகங் கொடுத்ததுவும்
ஆடுங் கிளைமிசை 
ஏறிச் சிறுவர் 
குதிரை விடுத்ததுவும்
ஏடு தருங்கதை 
யாக முடிந்தன! 
இன்று வெறுங்கனவே!

– தமிழ்ஒளி


1. கவிஞர் தமிழ்ஒளி – 1924-1965

2. பிறந்த ஊர் – புதுவை.

3. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர்: மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.

4. படைப்புகள் 

  • நிலைபெற்ற சிலை, 
  • வீராயி, 
  • கவிஞனின் காதல், 
  • மே தினமே வருக, 
  • கண்ணப்பன் கிளிகள், 
  • குருவிப்பட்டி, 
  • தமிழர் சமுதாயம், 
  • மாதவி காவியம்

5. பட்ட மரம் என்னும் பாடலை எழுதியவர் – கவிஞர் தமிழ் ஒளி.